Thursday, March 13, 2008

ஆதிபகவன் அருகனைக் குறிக்கும்!

ஆதிபகவன் அருகனைக் குறிக்கும்!
- மஞ்சை வசந்தன்

கடவுள் வாழ்த்து என்பது சரியா?

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு - திருக்குறள் (1)

எழுத்துக்களில் எல்லாம் ‘அ’ என்னும் எழுத்தை முதலாக உடையன. அதுபோல், உலகம் ஆதிபகவனைக் முதலாகவுடையது என்று கடவுள் நம்பிக்கையாளர்கள் கருத்துக் கூறுகிறார்கள். ஆதிபகவன் என்பதற்கு கடவுள் என்று சிலரும், இறைவன் என்று சிலரும் பொருள் கூறி முறையே, கடவுள் வாழ்த்து என்றும் இறை வாழ்த்து என்றும் இந்த அதிகாரத்திற்குத் தலைப்பு சூட்டியுள்ளனர்.

ஆனால், இவ்வதிகாரத்திலுள்ள குறட்பாக்களை நுட்பமாக ஆய்வு செய்தால், இவ்வாறு பொருள் கொள்வது சரியன்று என்பது தெளிவாக விளங்கும்.

இதே அதிகாரத்தில்,

“தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது - திருக்குறள் (7)

தனக்கு உவமை இல்லாதது கடவுள் (இறை) என்றால் உவமையில்லாத கடவுளுக்கு “அ” எழுத்தை உவமை சொல்லி, முதல் குறள் எப்படி அமைக்கப்பட்டிருக்க முடியும்? அவ்வாறு அமைக்கப்பட்டிருப்பின் அது மேற்கண்ட குறளுக்கு முரண் அல்லவா? அப்படியென்றால், உவமையில்லாத கடவுளுக்கு உவமை கூறி, முதல் குறள் அமைக்கப்பட்டிருக்க முடியாது என்பது உறுதியாகிறது.

அதன்படி நோக்கின் முதல் குறளுக்கு உண்மையான வேறு பொருள் இருக்க வேண்டும். அந்த உண்மைப் பொருள் என்னவாக இருக்கும்? அதை அறிய, ஆதிபகவன் கடவுளைக் குறிப்பதா? அல்லது வரலாற்றில் வாழ்ந்த தலைவரைக் குறிப்பதா? என்பதை முதலில் உறுதி செய்து கொள்ளவேண்டும். வரலாற்றுச் சான்றுகளின் படியும், ஆதிபகவன் என்பவர் முதலாம் தீர்த்தங்கரராகிய அருகதேவர் (இடபதேவர்) ஆவார். அவருக்குப் பின் 23 தீர்த்தங்கரர்கள் இருந்தமையால், முதல் தீர்த்தங்கரர் ஆகிய இடபதேவருக்கு “ஆதிபகவன்” என்று பெயர் வந்தது. இது வரலாற்று உண்மை.

இவர்தான் முதன் முதலில் உலகுக்கு எழுத்துக்களைக் கற்பித்தார் என்பது சமணக் கொள்கை. அதன்படி நோக்கின், ‘அ’ என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்ட அனைத்து எழுத்துக்களும், ஆதி பகவனை மூலமாகக் கொண்டவை என்பது பொருள்.

அதாவது ‘அ’ முதலிய எழுத்துக்கள் எல்லாம் ஆதிபகவனை முதலாக உடையன “ஆதி பகவனிடமிருந்து வந்தவை) என்பதுதான் இக்குறளுக்குப் பொருள். இதுவே சரியான பொருள். அப்படிப் பொருள் கொள்ளும் போது, முரண் ஏதும் இல்லாத, வரலாற்றுக்கிசைந்த, சான்றுகளுடன் கூடிய பொருளாக அது அமையும். இங்கு ஏழாம் வேற்றுமை உருபு தொக்கி நிற்பதை கருத்தில் கொள்ளவேண்டும்.

ஆக, இக்குறளுக்கு உலகில் அகரத்தை முதல் எழுத்தாகக் கொண்ட எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஆதிபகவனிடம் தோன்றியது என்பதே சரியான பொருள் ஆகும். அதாவது, உலகுக்கு அறிவை வழங்கியவர் ஆதிபகவன் என்பது இக்குறளின் நுண்பொருள்.

எழுத்துக்களையும், எண்களையும், உழவித் தொழிலையும், உலகுக்குக் கொடுத்தவர் (கற்பித்தவர்) ஆதிபகவன் என்பது சமணர் கொள்கை. இம்மூன்றும் அவரே மூலகர்த்தாவாகக் கொள்ளப்பட்டார். அவரே எண்ணின் மூலம், அவரே எழுத்தின் மூலம். அவரே உழவின் மூலம் என சமணர்களால் போற்றப்பட்டவர் என்பதை ஆய்வில் கொள்ளவேண்டும்.

பரிமேலழகர் போன்ற உரையாளர் இக்குறளுக்கு உரை எழுதும் போது, ஏனைய எழுத்துக்களுக்கெல்லாம் ‘அ’ எழுத்தே அடிப்படை; அதிலிருந்தே மற்றய எழுத்துக்கள் பிறக்கின்றன. அதுபோல், கடவுள் உலகத் தோற்றத்திற்கு அடிப்படை என்று பொருள் கொள்கின்றனர். இவ்வாறு பொருள் கொள்வது முற்றிலும் சரியன்று.

காரணம், எழுத்துக்களின் முதல் எழுத்துத் தான் ‘அ’ எழுத்தே தவிர, மற்ற எழுத்துக்களின் தோற்றத்திற்கு ‘அ’ எழுத்து அடிப்படையானதன்று.‘உ’ என்ற எழுத்துக்கு ‘அ’ எழுத்து எப்படி அடிப்படையாக அமைய முடியும். ‘உ’ எழுத்து தோன்ற ‘அ’ எழுத்து அடிப்படையாக அமைவதில்லை.

“அகரம் ஏனைய எல்லா எழுத்துக்களோடும் நுண்ணியதாக கலந்தும், எல்லா மெய் எழுத்துக்களையும் இயக்கியும் நிற்றல் போல், இறைவனும் உலகிற்கு முந்தியும் உயிருக்குயிராயும், உயிரற்ற பொருட்களையெல்லாம் இயக்கியும் நிற்பவன்” என்பது இக்குறளின் பொருள் என்கிறார். பாவாணரின் இக்கருத்து முற்றிலும் சரியன்று.

‘உ’ எழுத்தில் ‘அ’ எழுத்து எங்ஙனம் நுண்ணியதாகக் கலந்திருக்க முடியும்?
‘அ’ என்பதும் உயிர் எழுத்து.
‘உ’ என்பதும் உயிர் எழுத்து.

இரண்டும் தனித்து நிற்கவல்லன. அதன் காரணம் பற்றியே அவை உயிர் எழுத்து எனப்பெயர் பெற்றன. ஒர் உயிர் இன்னொரு உயிருடன் கலவாது. உயிர் மெய்யுடன் மட்டுமே கலக்கும். ஒவ்வொரு உயிரும் மெய்யெழுதுடன் சேர்ந்து உயிர் மெய்யெழுத்தை உருவாக்கும். அப்படியிருக்க ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கொள்வதும்; கூறுவதும் எப்படிச் சரியாகும்?

‘இ’ என்ற எழுத்தை எப்படி உச்சரித்தாலும் ‘அ’ ஒலி நுண்ணியதாய்க் கலப்பதை; கலந்திருப்பதை அறிய முடியவில்லையே.
க்+அ=க என்று சொல்லும்பொழுது ‘க’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளது வெளிப்படும். ஆனால், ‘இ’ எழுத்தில் ‘அ’ கலந்துள்ளதை எவ்வாறு புலப்படுத்த இயலும்? அல்லது எவ்வாறு புரிந்துக் கொள்ள இயலும்?

எந்தவொரு எழுத்தையும் உச்சரிக்கும் போது வாய் திறந்திருக்கிறோம். வாய்த் திறந்தாலே அங்கு ‘அ’ என்பது நுண்ணியமாய் ஒலிக்கும். எனவே, எல்லா எழுத்துக்களிலும் ‘அ’ நுண்மையாகக் கலந்துள்ளது என்று கூறலாம் எனச் சிலர் கருதுவர். அங்காந்த வாயே அகரத்தின் இடமாயினும் (தொல்காப்பியப்படி), வாய்ந்திறந்தாலே ‘அ’ ஒலிப்பதாகத் தோன்றும். ஆனால், அது உண்மையல்ல. எழுத்தை நினையாது வாய்த்திறந்து பார்த்தால், ‘அ’ ஒலிப்பதைத் தோன்றிய தோற்றங்கூட இருக்காது.
வாய்த்திறப்பதால் ஒலி எழுவதில்லை. அணு அளவாவது ஒலிப்பதற்குரிய முயற்சி மேற்கொண்டால் தான் ஓசை எழும். இல்லையேல் எழாது என்பதே உண்மை. வாய்த்திறந்து ஆய்வு செய்து பார்த்தால் இந்த உண்மையை அறியலாம்.

“நிறையுயிர் முயற்சியி னுள்வளி துரப்ப
எழுமணுத் திரளுரங் கண்டம் உச்ச
மூக்கற் றிதழ்நா பல்வணத் தொழியின்
வெவ்வேறு எழுத்தொலியாய் வரங்பிறப்பே”
- நன்னூல்

எனவே, ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களிலும் நுண்ணியதாய்க் கலந்திருப்பதாகக் கூறுவது சரியன்று.

அதன் வழி நோக்கின், ‘அ’ எழுத்து எல்லா எழுத்துக்களுக்கும் மூலமாக அமைவதாய்ப் பொருள் கூறுவது பொருந்தாது.
அதேபோல் ஆதிபகவன் என்பதை இரு பெயரெட்டுப் பண்புத் தொகை என்று பரிமேலழகர் கொள்வதும் சரியன்று.
அதாவது, ஆதி எனினும் கடவுள், பகவன் எனினும் கடவுள் எனவே, கடவுளைக் குறிக்கும் ‘ஆதி’ என்ற பெயரும் பகவன் என்ற பெயரும் ஒட்டி ஆதிபகவன் ஆயிற்று எனப்து பரிமேலழகர் விளக்கம்.

இது பெயரொட்டுப் பண்புத்தொகை என்பது ஒரே பண்பை கொண்ட இரு சொற்கள் ஒட்டி இருந்தால் மட்டுமே பொருந்தும்.
எடுத்துக்காட்டாக ‘சாரைப்பாம்பு’ சாரையன்றாலும் பாம்பு என்றாலும் ஒன்றேயாகும். இங்கு சாரை, பாம்பு என்று சொற்கள் ஒட்டி இரு பெயரொட்டு பண்புத்தொகை ஆகும்.

ஆனால், ‘ஆதிபகவன்’ எனபதில் ஆதி என்பதும் பகவன் என்பதும் வெவ்வேறு சொற்கள். ஆதிமூலம் இரு பெயரொட்டு பண்புத்தொகையாகின்றன. ஆனால், ஆதிபகவன் என்பதில் ஆதி என்பதற்குப் பொருள் வேறு. பகவன் என்பதற்குப் பொருள் வேறு.ஆதியாகிய பகவன் என்று அது விரியாது. காரணம், ஆதிபகவன் என்பது காரண இடுகுறிப் பெயராய் அமைந்து, ஒரு பெயராய் ஆனதாகும்.

மேலும் பரிமேலழகர், பதவுரை கூறும்போது ஆதி பகவனாகிய என்று விரித்துப் பண்புத் தொகையாக்குகிறார். கருத்துக் கூறும்போது ஆதியாகிய பகவன் என்று விரித்து இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாக்குகிறார். இது வன்மையான கண்டனத்திற்குரியது.

இவ்வாறு ஏன் அவர் செய்கிறார் என்றால், ‘ஆதி பகவன்’ என்பதை இரு பெயரொட்டு பண்புத்தொகையாக்குவதன் மூலம், ஆதிபகவன் என்ற சொல்லைக் கடவுளுக்குப் பொருத்திக் காட்டலாம் என்பதற்காகவே, அதாவது, ஆதி என்றாலும் கடவுள், பகவன் என்றாலும் கடவுள், கடவுளைக் குறிக்கும் இவ்விருப் பெயர்களும் ஒட்டி ஆதிபகவன் ஆயிற்று என்று கூறுவதன் மூலம், இக்குறளைக் கடவுள் மயமாக்கிவிடலாம் என்ற முயற்சிதான். ஆனால், இது தவறு என்பதை விளக்குவதற்காகத்தான் மேலே விரிவாக விளக்கினேன்.

இருபெயரொட்டுப் பண்புத் தொகையென்றால் ஆதிப்பகவன் என்று இருக்கவேண்டும். காரணம் இரு பெயரொட்டுப் பண்புத் தொகையில் வல்லெழுத்து மிகும். ஆனால், குறளில் ஆதிபகவன் என்றெ உள்ளது. ஆகவே, அது இருபெயரொட்டுப் பண்புத்தொகை அல்ல என்பது உறுதி செய்யப்படுவதை அறிய வேண்டும்.

ஆதிபகவன் என்றால் வாழ்ந்த தலைவர்களுள் ஆதியானவர் என்பது மட்டுந்தான் பொருளேயன்றி, அவர் உலகத்திற்கு மூலமானவர் அல்ல.எனவே, ஆதிபகவன் என்பது வரலாற்றில் வாழ்ந்த அருகதேவருக்குப் பொருந்துவதேயன்றி, புலனாகாத கடவுளுக்குப் பொருந்துவதன்று.

மேலும், எழுத்துக்கள் உருவானது அருக தேவனாகிய ஆதிபகவனிடம் என்று பொருள் கொள்ள ஆதாரங்கள் உள்ளன.

“விறுப்புறு பொன்எயிற்குள்
விளங்குவெண் ணெழுத்திரண்டும்
பரப்பிய ஆதிமூர்த்தி”

என்று மண்டல புருடர் தம் “சூடாமணி நிகண்டில்” 4ஆவது தொகுதியிலும்,

“கோதில்வருகன் திகம்பரம் எண்குணன் முக்குடையோன்
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்”

என்று கயாதர நிகண்டிலும், அருகதேவரே ஆதிபகவன் என்பதும், அவரே எழுத்துக்களை உலகிற்குக் கற்பித்தார் என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

அது மட்டுமின்றி, முதல் அதிகாரத்தில் குறிக்கப்பட்டுள்ள ‘எண்குணன்’, ‘ஆதிபகவன்’, ‘அறவாழி அந்தணன்’ என்பவை அருகதேவரையே குறிப்பன என்பதையும் மேற்கண்டவர்கள் உறுதி செய்கின்றனர்.

மேலும், “ஆதிபகவனை அருகனை” என திருக்கலம்பகம் (செய்யுள் 109) சுட்டுகிறது. எனவே ஆதிபகவன் என்பது அருகதேவரையே குறிக்கிறது என்பது அய்யத்திற்கிடமின்றித் தெளிவாகின்றது.

எனவே முதல் குறளுக்கு, உலகில் அகரத்தை முதலாகவுடைய எழுத்துக்கள் எல்லாம் ஆதிபகவனிடமிருந்து தோன்றியவை என்பதே பொருள். அறிவை உலகிற்குத் தந்தவர் ஆதிபகவன் என்பதே அதன் உட்பொருள்.

முற்றும்.


(இக்குறளுளைப் பற்றிய என் பார்வையைப் பிறகு எழுதுகிறேன்)


இரா.பானுகுமார்,
சென்னை.

Saturday, February 16, 2008

அறவாழி அந்தணன்

அறவாழி அந்தணன்

மலர்மிசை ஏகினான் என்ற கட்டுரையை எழுதிய போது தனிப்பட்ட மடல்கள் நிறைய வந்தன. சில பாராட்டியும் சில எதிர்த்தும் வந்தன. ஒரு அன்பர் அறவாழி அந்தணன் என்ற தொடர் அருகனுக்கு எவ்வாறு பொருந்தும் என்று எதிர்க் கேள்வி கேட்டிருந்தார். திருக்குறளில் ஒரு சில குறட்பாக்கள் சமணத்தைக் குறித்திருந்தாலும் சில குறட்கள் சமணத்துக்கு பொருந்துவதாக இல்லையே? என்று தமது மடலில் குறித்திருந்தார். அவர் மேலும் ‘அறவாழி அந்தணன்” என்ற சொற்றொடரில் இருக்கும் “அந்தணன்” என்ற சொல் எப்படி அருகனைக் குறிக்கும்? என்று வினவியிருந்தார். அவருக்கு பதில் மடல் எழுதியக் கையோடு எழுத ஆரம்பித்தக் கட்டுரைத் தான் இது!

அறவாழி

“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது” - திருக்குறள் (8)

மேலே கூறப்பட்ட குறளில் வரும் “அறவாழி அந்தணன்” என்றத் தொடர்தான் இங்கு விவாதப் பொருளாக்கப்பட்டு வந்திருக்கிறது. இச்சொற்றொடருக்கு பொருள் என்ன?

1. அறவாழி அந்தணன் - அறக் கடலாகிய அந்தணன் என்று ஒன்றும்,
2. அறவாழி அந்தணன் - அறச் சக்கரத்தை உடைய அந்தணன் என்றும் இரண்டு விதமாக பொருள் கொள்ளலாம்.

ஆனாலும் மேலே சொன்ன குறளுக்கு எந்த பொருள் பொருத்தமாக இருக்கும் என்பதைப் பொருத்தே அந்த குறளின் முழுப் பொருளையும் உணர்ந்துக் கொள்ள முடியும்.
முதலாவது எடுத்துக்கொள்வோம். அறவாழி = அறக்கடல் என்று பொருள் கொண்டால்; அறக்குணத்தைக் கொண்ட அந்தணனை (கடவுளை) பற்றினால் (புணை) பிற (மற்ற) கடல்களை நீந்துதல் எளிது. இதையே புரியும்படி எழுதுகிறேன்.
“ அறக்கடலாகிய அந்தணனனை பற்றினால் பிறத்தலாகிய கடலைக் கடக்கலாம் என்றும் அப்படி பற்றாதவர்க்கு பிறவு ஆழியைக் கடப்பதன்பது அரிதாம்’.

இது பொருந்தாதாம் எப்படி?

அந்தணனை (கடவுளை) அறக்கடலாக உருவகித்தால் அவர் பாதத்தை எப்படி புணையாக அல்லது தெப்பமாக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? கடலை உருவகித்து கடலைக் கடக்கச் சொல்வது என்பது பொருள் குற்றம். பொருந்தாது என்னை?

சரி. இரண்டாவதுப் பொருளை எடுத்துக்கொள்வோம். அறவாழி = அற சக்கரம் என்று பொருள் கொண்டால்; அற சக்கரத்தை உடைய அந்தணனை (கடவுளை) பற்றினால் பிறவிக் கடலைக் கடக்கலாம். அஃதாவது,

“தர்ம சக்கரத்தையுடைய அந்தணனின் தாள் பற்றினால், பிறவிக் கடலைக் கடக்கலாம் என்றும் அப்படி பற்றாதவர்களுக்கு அக்கடலைக் கடக்க முடியாது என்பதாம்”

இங்கே அற சக்கரத்தையுடைய அந்தணனின் தாள் புணையாக உருவகித்தால், பிறவாழி; பிறவியாகிய கடலை நீந்திக் கரையேரலாம் என்பது பொருத்தமாக இருக்குமன்றோ!

இது நிற்க!

அந்தணன்

இக்குறளில் உள்ள அந்தணன் என்ற சொல் யாரைக் குறிக்கும்?
அந்தணன் என்ற சொல் வைதீக வேதியர்களைக் குறிக்கிறது என்று பலர் தவறாகப் பொருள் கொள்கிறார்கள். அப்படித்தான் அந்த அன்பரும் பொருள் கொண்டு என்னோடு மடலாடினார். அவர் மட்டுமன்று தமிழ்க் கற்ற பெரியோர்களையும் அச்சொல் மயக்கியே வந்திருக்கிறது.

அந்தணர் என்போர் அறவோர்

திருக்குறளில் நீத்தார் பெருமையென்னும் அதிகாரத்தில் 30ஆவது குறள்,

“அந்தணர் என்போர் அறவோர்மற் எவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டுஒழுக லான்”

அறவோரே அந்தணர்; அத்தோடு இல்லாமல் எந்த உயிருக்கும் ஒரு தீங்கும் செய்யாதவரே அந்தணர் என்று அழுத்தம் திருத்தமாக குறள் குறித்திருக்கிறது. அஃதாவது, யாரொருவர் எந்த உயிர்களுக்கு தீங்கு செய்யாமல், அவற்றை யாதொன்றையும் கருதிக் கொல்லாமல் இருக்கிறாரோ அவரே அந்தணர் என்றுப் போற்றப்படுகிறார். இது யான் சொல்லவில்லை. அந்தக் குறள் அப்படித்தான் அந்தணருக்கு இலக்கணம் வகுத்திருக்கிறது. என்னை?

இதனால் அந்தணர்கள் எவ்வுயிருக்கும் தீங்கு செய்யாதவர்கள் என்பது அங்கை நெல்லிக்கனி!

அந்தணர் என்ற சொல் அக்காலத்தில் (குறள் எழுந்தக் காலக்கட்டத்தில்) நிச்சயம் வைதீக பிராமணர்களைக் குறித்திருக்காது என்பது நிதர்சனம். அக்கால வைதிகர்கள் வேத யாகங்களில் மிருகங்களை பலியிட்டிருக்கிறார்கள்.(பார்க்க: நீலகேசி) இதனால் அந்தணன் என்ற சொல் அவர்களைக் குறிக்கவில்லை என்பது பெறப்படுகிறது.

ஈண்டு முக்கியமான ஒன்றை குறித்துக் கொள்ளவேண்டுகிறேன். அந்தணன் என்றால் அது வைதிக பிராமணனைத் தான் குறிக்கும் என்று எடுத்துக் கொண்டால், அப்பகுப்பு முறை ( வருண வேறுபாடு) மனிதர்களுக்கு மட்டுமே உரியது. இறைவன் எல்லாவற்றையும் கடந்தவர். அவரை அந்தணரோடுத் தொடர்புப்படுத்த முடியாது. இல்லையா?

அறவாழி அந்தணன்

அற சக்கரத்தையுடைய அல்லது தரும சக்கரத்தையுடைய அருகக் கடவுளின் தாளை பாதத்தை பற்றாதவர்களுக்கு பிறவியாகிய கடலை (சம்சார கடலை) கடப்பதன்பது அரிது. இதுவே நேரிதன் உரை. உண்மையான பொருளும் கூட.
இங்கே தர்ம சக்கரத்தை உடைய அருகனின் பாதத்தை புணையாக உருவகித்து, பிறவியைக் கடலாக உருவகித்தால் அந்தக் குறளின் பொருளை நன்கு பருகலாம்.

தர்ம சக்கரம் (அறவாழி)

அருகப் பெருமான் எண்வகை சிறப்பை உடையவர்.

1. அசோக மரம் (பிண்டி)
2. தேவரின் மலர் பொழிவு (மலர் துவுதல்)
3. திவ்வியத் தொனி ( உதடுகள் அசையாமல் வரும் ஒலி)
4. சாமரம்
5. சிம்மாசனம் (அரியாசனம்)
6. தருமச் சக்கரம்
7. ஒளி மண்டலம்
8. முக்குடை

மேலே சொல்லப் பட்ட எட்டு சிறப்புகளில் தருமச் சக்கரமும் ஒன்று. (புத்தபிரானுக்கும் இக்குறள் பொருந்தும்)

இலக்கிய ஆதாரங்கள்

“தூண்டுதிண் டேருருள் போலச் சுழன்றுதொல் யோனிகட்கே
மீண்கொண் டேகுமவ் வெவ்வினைக் கஞ்சிநின் மெய்ச்சரணம்
பூண்டு கொண்டேனினிப் போகவொட் டேன்பொரு ளாகவென்னை
யாண்டுகொண் டாயற வாழிகொண் டேவென்ற வந்தணனே
- திருநூற்றந்தாதி (27)

“ஆதியங் கட்விள் அறவாழி அந்தணன்
அரியணைச் செல்வன் அருளாழி வேந்தன்”
- திவாகர நிகண்டு

“அருகன் எண்குணன் நிச்சிந்தன்
அறவாழி வேந்தன் வாமன்..”
- சூடாமணி நிகண்டு

அறவாழி வேந்தன் அரியணைச் செல்வன்..”
- பிங்கல நிகண்டு

“மறங்கொள் நேமி விட்டெறிந்து மன்னர் சென்னி சோறியில்
பிறங்க வென்ற வென்றியோர் அனேகபேர்; உலகெல்லாம்
இறைஞ்ச எங்கள் வல்வினைத் தெவ்வர் சிந்த வெந்துபேர்
அறங்கள் நேமி* கொண்டு வென்ற சோதி எங்கள் ஆதியே”
- திருக்கலம்பகம் (25)

(இப்பாடலின் பொருள் புரியவில்லை என்றால் கேளுங்கள் எழுதுகிறேன். ஏன்னென்றால், இப்பாடல் திருக்குறள் ஆராய்வோருக்கு மிக முக்கியமான ஒன்று. (* நேமி என்றால் சக்கரம்)

“களிசேர் கணையுடைய காமனையும் காய்ந்த
அளிசேர் அறவாழி அண்ணல் இவன் என்பர்
அளிசேர் அறவாழி அண்ணல் இவனேல்
விளியாக் குணத்துதி நாம் வித்தாவா றென்னே”
- சீவக சிந்தாமணி (1611)


இவ்வாறு நிறைய இலக்கிய சான்றுகள் காட்டலாம். முடிபாக, யான் நிறைய முறை சொன்னாற்போல் அருக பகவான், நம்மை போல் பிறந்து, உலக மக்கள் உய்ய நல்லறம் பகர்ந்தார். அவரே கொல்லாமை முதலிய அறங்களை பகர்ந்தார், ஆதலில் அந்தணன் என்ற சொல் அருகக் கடவுளைத் தவிர வேறு கடவுளுக்கு பொருந்தாது. ஆராய்ச்சி அறிஞர் மயிலையார் சொல்வார், அறவாழி அந்தணன் என்ற தொடர் மற்ற கடவுளர்களை, ஏன் திருமாலையும் குறிக்காது என்று சான்றுக் காட்டி எழுதியிருக்கிறார். அக்கட்டுரையைக் கீழே உள்ள வலைச்சுட்டியில் படிக்கவும்.


http://blog.360.yahoo.com/blog-IHs9FFYzeqhS6IL.5yu4wTp7Ww--?cq=1&p=11
http://www.treasurehouseofagathiyar.net/27800/27809.htm
http://www.treasurehouseofagathiyar.net/27900/27927.htm


இரா.பானுகுமார்,
சென்னை

Friday, January 25, 2008

இந்திரனே சாலும் கரி

இந்திரனே சாலும் கரி

திருக்குறளில் நீத்தார் பெருமை என்னும் அதிகாரத்தில் வரும் குறளின் கடைசி அடி இவ்வாறு வரும் ‘இந்திரனே சாலும் கரி”. இந்தப் பாடலைப் படிக்கும் போதெல்லாம் எனக்குள் எழுந்தக் கேள்விகள் நிறைய என்றாலும் அவற்றுக்கு ஏனோ முக்கியத்துவம் கொடுக்காமலே இருந்து வந்தேன். சமீபத்தில் என் நண்பரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, இந்தப் பாடலைச் சொல்லி இதற்கு சமண விளக்கம் சொல்ல சொன்னார். ஏன் கேட்கிறீர்கள் என்று கேட்டதற்கு திருக்குறள் ஒரு சமண நூல் என்பீர்களே இதற்கு என்ன விளக்கம் சொல்ல போகிறீர்கள் என்று கேட்டார். அவருக்கு அளித்த விளக்கத்தையே இங்கு கட்டுரையாகக் கொடுத்திருக்கிறேன். படித்துவிட்டு பின்னூட்டு இடுங்களேன்.

திருக்குறள் “நீத்தார் பெருமை” என்னும் அதிகாரத்தில் வரும் அந்தக் குறள் இதுதான்.

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும் புளார்கோமான்
இந்திரனே சாலும் கரி” - திருக்குறள் (25)

பரிமேலழகர் உரை

திருக்குறள் உரையாசிரியர்களில் சிறந்தவராகக் கருதப்படும் பரிமேலழகர் என்ன சொல்லியிருக்கிறார் என்று முதலில் பார்ப்போம்.

ஐந்து அவித்தான் ஆற்றல் - புலன்களில் செல்கின்ற அவா ஐந்தனையும் அடக்கினானது வலிக்கு; அகல் விசும்பு உளார் கோமான் இந்திரனே சாலும் கரி - அகன்ற வானத்துள்ளார் இறைவனாகிய இந்திரனே அமையும் சான்று.

அவர் மேலும் விரித்து,

ஐந்தும் என்னும் முற்று உம்மையும், ஆற்றற்கு என்னும் நான்கன் உருபும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், ‘இந்திரனே சாலும் கரி’ என்றார்.
அவர் மேலும் விளித்து கெளதமர்க் கதையை இக்குறளுக்கு சான்றுக் காட்டிருக்கிறார்.

உரை ஆய்வு

“தான் ஐந்து அவியாது சாபம் எய்தி நின்று, அவித்தவனது ஆற்றல் உணர்த்தினான் ஆகலின், ‘இந்திரனே சாலும் கரி’” என்ற அவரின் விரிவுரையை எடுத்துக் கொள்வோம்.

இவ்விரிவுரை பொருந்தாது எவ்வாறெனின், இந்திரன் ஐந்து புலன்களை அடக்காதது போலவும், அப்படி அடக்கிய முனிவரின் சாபத்திற்கு ஆளானான் என்பது போலவும் உரை வகுத்திருக்கிறார். “சாபம்” என்ற சொல் இங்கு தேவையில்லாதது. வலிந்துப் புகுத்தப்பட்டது என்றே கருதவேண்டியிருக்கிறது. இச்சொல், பின்னாளில் பல குழப்பத்திற்கும் காரணமாக அமைய வழிக்கோலிவிட்டது எனலாம். காட்டாக, கெளதமர் என்ற முனிவர் தன் மனையாளிடம், இந்திரன் தவறாக நடந்துக் கொண்டதிற்காக அவனுக்கு சாபமிட்டார் என்று இக்குறளுக்கு உரையெழுதியிருக்கிறார். இவர். இது பொருந்தாது!
ஏன் குறளும் அக்கதையும் பொருத்தமாகத் தானே இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு யான் சொல்வது இதுதான். மேலெழுந்தவாரியாகப் பார்த்தோமானால் அவ்வாறு தான் தோன்றும். இக்கதை உள் உண்மையை மறைக்கத் தோன்றிய கதை என்று துணிந்துக் கூறலாம்.

மணக்குடவர் உரை

நுகர்ச்சியாகிய வைந்தினையுந் துறந்தானது வலிக்கு அகன்ற விசும்பிலுள்ளார்க்கு நாயகனாகிய இந்திரனே யமையுஞ் சான்று.
அவர் மேலும் தன் விரிவுரையில்,

இந்திரன் சான்றென்றது; இவ்வுலகின்கண் மிகத் தவஞ் செய்வாருளரானால், அவன் தன்பதம் இழக்கின்றானாக நடுங்குமாதலான். இது தேவரினும் வலியனென்றது.

உரை ஆய்வு

இவ்வுரை பரிமேலழகர் உரையை விட சிறந்தது. நேரிதன் உரை வகுத்திருக்கிறார். இங்கு முற்றும் துறந்தவர் ஆற்றலைக் கண்டு இந்திரனும் அஞ்சுவான் என்பதை சான்றாக கருதுகிறார் உரையாசிரியர். இது சமண உரை. இதனாலேயே யான் இவ்வுரைச் சிறந்தது என்று கூறுகிறேன் என்று கருதவேண்டாம்.

என் விளக்கம்

ஒரு குறளின் பொருளையறிய அக்குறளின் உரையை மட்டுமில்லாது அது எந்த அதிகாரத்தில் சொல்லப்பட்டது என்பதையும் கருதிற்கொண்டால்தான், அந்த குறளின் உட்கருத்தை தெளிவாகப் புரிந்துக் கொள்ள முடியும். அதுவே சிறப்பாம். பரிமேலழகர் உரையாசிரியர்களில் சிறந்தவர் என்பதில் ஐயமில்லை. இது முற்றிலும் உண்மையும் கூட. ஆனால், இவரிடம் உள்ள ஒரு குறை. காய்த்தல், உவத்தல் அகற்றி உரை செய்யாமைதான்.

காலத்தால் முந்தையது மணக்குடவர் உரை. பரிமேலழகர் இவர் (மணக்குடவர்) உரையையே பெரிதும் தன் உரையில் தழுவி சென்றிருந்தாலும், எந்தெந்த குறளில் தன் சமயத்தைப் புகுத்த முடியுமோ, அங்கெல்லாம் தான் சார்ந்த சமயத்தைப் புகுத்தி உரைக் கண்டிருக்கிறார். அவ்வாறே இந்தக் குறளிலும் புகுத்தியிருக்கிறார் என்பது நிதர்சணம்.

அப்படியென்ன தன்னுடைய சமயத்தை புகுத்தியிருக்கிறார்? எனின்,

இந்த குறள் சொல்லப்பட்ட இடம் ‘நீத்தார் பெருமை”. ‘நீத்தார்’ என்பது ‘முற்றும் துறந்த முனிவர்’களைக் குறிப்பது. அஃதாவது, முற்றும் துறந்தவர்களுடைய பெருமை என்பது பொருள். அவ்வாறே, அந்த கருத்திலேயே அந்த அதிகாரத்தில் உள்ள மற்ற குறள்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. முற்றும் துறந்தவர் என்றால் யார்?

என்றால்! தன்னுடைய ஐந்து புலன்களால் வரும் நுகர்ச்சியாகிய ஆசையை அடக்கி அல்லது அவித்து, தன்னுடையது என்று ஏதும் இல்லாமல், உற்றாற்கு உடம்பும் மிகை என்பதுபோல் யாரொருவர் இருப்பாரோ அவரே முற்றும் துறந்த முனிவர். இவரிடம் விறுப்பு, வெறுப்பு, காழ்ப்பு போன்ற குணங்கள் அமையா. அப்பேர்ப்பட்டவர்களையே முற்றும் துறந்தவர் என்பது சாலப் பொருந்தும். அப்பேர்ப்பட்டவர்கள் யாருக்காவது சாபம் விடுவார்களா? என்பது முதற் கேள்வி. அப்படி சாபம் விட்டால் தன்னிலை தாழ்ந்தவர்கள் ஆகிறார்கள். அவர்களுக்கு நமக்கும் (இல்லறத்தார்) வித்தியாசம் இல்லாமற்போய்விடும். இல்லையா?

ஏன்யா? தன்னுடைய பொண்டாட்டியிடம் யாராவது வாலாட்டினால் எவராவதுப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பார்களா? என்று யாராவது கேட்க கூடும்?

சும்மா இருக்க முடியாதுதான். அதற்கு யான் கூறும் சமாதானம் இதுவே. துறந்தவர் என்று நாம் யாரைச் சொல்கிறோம்? மனைவி, மக்கள், சுற்றம் இவர்களை ஒதுக்கியர்களைத்தான் துறந்தவர்கள் என்கிறோம். அதிலும், தன்னுடைய ஐந்து புலன்களையும் வென்றவர்களை “முற்றும் துறந்தவர்கள்” என்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும்போது மனைவியுடன் வாழ்ந்த கெளதம முனிவரை எப்படி முற்றும் துறந்தவர் என்று சொல்ல முடியும்? வெறும் ‘துறந்தவர்” என்றும் சொல்லமுடியாத போது முற்றும் துறந்தவர் என்று எப்படி கூறமுடியும்? என்னை?

குறளாசிரியரோ முற்றும் துறந்தவர்கள் பெருமையை சொல்லவருகிறார்? கெளதம முனிவர் துறந்தவரே அல்லர் அப்படியிருக்க கெளதம முனிவருடைய பெருமையை இக்குறள் கூறுகிறது என்பது எங்ஙனம் பொருந்தும்? சிந்திக்கவும்!

ஆதலால், முற்றும் துறந்தவர்கள் யாரையும் சாபம் விடமாட்டார்கள் என்பதம் அப்படி சாபம் விடுபவர்கள் முற்றும் துறந்தவர்கள் ஆகமாட்டார்கள் என்பதும் பெறப்படுகிறது. என்னை? அது நிற்க!

இன்னும் சிலருக்கு சந்தேகம் இருக்கக்கூடும் இல்லையா? கீழே வரும் சில குறட்பாக்கள் மூலம் அந்த சந்தேகங்களை களைய முயற்சிக்கிறேன்.

குறளாசிரியர் “துறவு” என்பதைப்பற்றி கூறுவதைக் காணலாம்.

“அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு” - 343

என்னுடைய உரை: துறவு என்பது என்ன? அடக்க வேண்டும் ஐந்து புலன்களையும் (புலன்களால் வரும் இச்சையை நுகர்ச்சியை), விட்டுவிட வேண்டும் எதையெல்லாம்? எது எது வேண்டும் என்று நினைக்கிறோமோ அவற்றையெல்லாம் விட்டுவிட வேண்டும். இங்கு ‘வேண்டிய’ என்பது மிகுபொருள் பொதிந்ததாம். மனைவி, மக்கள் (பிள்ளைகள்), சுற்றம், உறவினர் முதல் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள் உட்பட அனைத்தையும் குறிக்கும்.

“தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர்’ - 348

என்னுடைய உரை: தீரத் துறந்தவரே தலைப்பட்டார். தீர என்பது யான், எனது என்ற யாவற்றையும் துறந்தவரே தலைப்பட்டார். அஃதாவது வீடுபேறு பெறுவர் என்பதும் தீரத் துறக்காதவர்களுக்கு அப்பேறு இல்லையாம் என்பது கருத்து.
எனவே, அக்குறள் முற்றும் துறந்தவர்களின் பெருமை சொல்லவருகிறதே ஒழிய இல்லறத்தானின் பெருமையைச் சொல்ல வரவில்லை என்பதை நன்கறியலாம். இதனற்றான் யான் மணக்குடவர் உரை சிறந்தது என்று கூறலுற்றேன்!

சமணக் கருத்து

சமணக் கொள்கைப்படி இருவினையாகிய நல்வினையையும், தீயவினையையும் அகற்றினால்தான் வீடுபேறு கிட்டும். இறைவனாக விளங்க முடியும். இருவினை சேரா இறைவன் என்பதும் தேவர் வாக்கன்றோ? சமணத்தின்படி, உயிர்கள் தத்தம் வினைகளின்படி நான்கு கதிகளை அடையும். அவை மனிதக்கதி, தேவக்கதி, மிருகக்கதி, நரகக்கதி என்பனவாம். உயிர்கள் முறையே நல்வினை கட்டினால் தேவக்கதி, மனிதக்கதியையும், தீவினை கட்டினால் விலங்குக்கதி, நரகக்கதியையும் அடையும்.

இக்கதிகளில் மனிதக்கதியே சிறந்ததாம்! அரிதரிது மானிடராய் பிறத்தலரிது என்பது சமணப் பிராட்டி அவ்வை வாக்கு. மனிதக்கதியில் இருந்தே “சிவகதி”யடைய முடியும்; அஃதாவது வீடுபேறு அடைய முடியும் என்பது சமணக் கோட்பாடு. (சிலப்பதிக்காரத்தில் “சிவகதி நாயகன்” என்று அருக பகவான் போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.)

இந்திரன்

தேவக்கதியில் பிறந்தவர்களை தேவர்கள் என்றும் அழைக்கிறது சமணம். இவர்களுக்கு தலைவன் ‘இந்திரன்” எனப்படுபவன். இங்கு இந்திரன் என்பது ஒருவர் அல்லர். தேவர்களில் தலைசிறந்தவர்களை ‘இந்திரப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். ஆதலால், இந்திரப் பதவி என்பது நன்னடத்தை உள்ள ஒருவரே வகிக்க முடியும். இங்கு கூறப்படும் இந்திரன் வைதிக சமயத்தில் கூறப்படும் இந்திரன்போல் அல்லன். “சமண இந்திரன்” நன்னடத்தை உள்ளவன். காமுகன் அல்லன். மொழிக்கு இலக்கணம் படைத்த முனைவன். பேரறிஞன். இதனால் இந்திரன் பதவி என்பது நன்னெறியுள்ள உயிர்களுக்கே கிடைக்கும் பேறு.

இந்திரன் பணிதல்

சமண மரபுப்படி, எவர் ஒருவர் தம் ஐந்து புலன்களையும் தவமேற்றி “மெய்யுணர்வு” (வாலறிவு) பெறுகிறாரோ அப்போது இந்திரன் தன் அவதி ஞானத்தால் அறிந்து அவர் முன் மண்டியிட்டு வணங்குவான் என்பது கருத்து.

1. தேவக்கதி என்பது கிடைத்தற்கரியக் கதி. அவற்றிலும் இந்திரப் பதவி அடைவதென்பது பெரும்பேறு.
2. அப்பேற்ப்பட்ட பேறு பெற்ற இந்திரனே மனிதக்கதியில் பிறந்து முற்றும் துறந்துவர்களை வணங்கினான் என்றால் ‘முற்றும் துறந்தவர்” ஆற்றல் எத்தகையது என்பது சொல்லாமல் விளங்கும்!

இது தீர்த்தங்கரர்களுக்கும் பொருந்தும். எப்படியெனின்,

கடை கல்யாணம்

தீர்த்தங்கரர் வாழ்க்கையில் முக்கிய ஐந்து சம்பவங்களை பஞ்ச கலியாணங்கள் என்று பெயரிட்டு அழைக்கிறது சமணம். அவை முறையே, கர்ப்பாவதரண கல்யாணம், ஜன்மபிஷேக கல்யாணம், தீட்சாக் கல்யாணம், வேலாற்பத்தி கல்யாணம் மற்றும் பரிநிர்வாணக் கல்யாணம் என்பனவாம். இதில் தீர்த்தங்கர பகவான் வேலாற்பத்திக் கல்யாணம் என்னும் வாலறிவு பெறும்போது விசும்புலகில் உள்ள இந்திரனுடைய சிம்மாசனம் ஆடுமாம். இதனால், இந்திரன் தீர்த்தங்கர பகவான் வாலறிவு பெற்றதை உணர்ந்து, அவரைக் கண்டு அடிபணிந்து வணங்குவான் என்பதும் ஈண்டு நினைத்தற்பாலது.

எடுத்துக்காட்டாக,

“பயம்பகை பணித்த லார்வஞ் செற்றமே கவர்ச்சி சோகம்
வியந்திடல் வெகுளி சோபம் வேர்த்திடல் விரும்பல் கேதம்
மயங்குதல் தெளிதல் சிந்தை வருந்துதல் களித்தல் மாயம்
இயம்பருந் திறந்த வின்ன யாவையு மெறிந்தி ருந்தார்’
- மேருமந்தர புராணம் (1385)

உரை: இப்பாடல் முற்றும் துறந்தவர் இலக்கணத்தைச் சொல்கிறது.


“ ஆயிடை யமரர் தங்கண் முடியொடா சனந்து ளங்கப்
பாயநல் லவதி யென்னும் பருதியாற் கண்ட தெல்லாம்
ஆயிரங் கண்ணி னானை யதிபதி யாகச் சூழ்ந்து
மாயிரும் விசும்பும் மண்ணும் மறையவா னவர்கள் வந்தார்
- மேருமந்தர புராணம் (1386)

உரை: மேலே கூறப்பட்ட இயல்பைக் கொண்ட துறந்தார் முன், ‘ முடியுடன் - கீரிடமுடன், ஆசனமும் - இருக்கையும்’ சனந்து - ஆட அல்லது சலிக்க கண்டு அவதி ஞானத்தால் உணர்ந்து அவரைக் காண வந்தார்கள்.

மேலும்,

“அரம்பையர் நடம்பு ரிந்தா ரம்பர மரங்க மாக
.......
.......
யுரங்கடிந் திருந்த வீர ருறுதுணை யடிப ணிந்தார்”
- மேருமந்தர புராணம் (1388)

உரை: அப்படி அமரர்கள் சூழவந்த இந்திரன் அவர் இரண்டு பாதம் அடி பணிந்தான்.
என்று மேலே காட்டியப் பாடல் உரைக்கிறது.

இன்னுமொரு காட்டு,

“கேவல முற்பத்தி யாமள வேகிளர் பூசனைக் கென்
றேவலி யற்றுமவ் விந்திர னுகுமுன் னெண்குணத்தெங்
காவல னைக்கவிப் பார்வளைப் பார்முளைப் பார்களைப்போல்
மூவுல கத்துள்ள நால்வகைத் தேவரு முன்னுவரே”
- திருநூற்றந்தாதி (11)

உரை: எட்டு குணங்களையுடைய என்னை காப்பவராகிய தலைவருக்குக் கேவல ஞானமானது தோன்றிய பொழுது, நால்வகைத் தேவர்களும், அவர்களுடைய தலைவனான இந்திரனும் அவருக்கு சிறப்பு செய்ய முன்னுவரே - வருவரே என்பது பொருள்.

முடிபு

“ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும் புளார்கோமான்
இந்திரனே சாலும் கரி”

இந்தக் குறளில் இன்னொன்றையும் கவனத்தில் கொள்ளவேண்டும். ‘அகல்விசும் புளார்கோமான் இந்திரனே” என்பது மேலுலகத்தின் கோமானான இந்திரனே என்று இந்திரனை உயர்த்தியே கூறப்பட்டிருக்கிறது. கோமான் என்று சிறப்படை மொழிக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மாற்றான் மனைவியை வஞ்சித்தானுக்கு கோமான் என்று சொல்வரோ? அவன் கயவன், காமுகன் அல்லவா? “அகல்விசும் புளார்கயவன் இந்திரனே” என்று தானே பாடியிருக்கவேண்டும். அவ்வாறில்லாமல் சிறப்பு அடைமொழி கொடுத்து ஏன் கூறவேண்டும்?. குறளாசிரியர் உட்கருத்து யாது என்றால், கிடைதற்கரிய பேறு பெற்ற இந்திரனைவிட, முற்றும் துறந்து, ஐந்து புலன்களை அடக்கியவர்களே சிறந்தவர்கள் என்றுக் காட்டவே, இந்திரனை சான்றுக் காட்டினார் என்றறிக!.


அறம் மறவற்க!


இரா. பானுகுமார்,
சென்னை 61